கன்னியாகுமரி அக், 8
நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இலவுவிளை பகுதியில் பட்டணங்கால்வாய் குறுக்கே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள பாலத்திற்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை அனுமதி அளிக்காததை கண்டித்தும், பட்டணங்கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இலவுவிளை பகுதி கிராம மக்கள் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாலம் கட்டப்படாததால் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.