விருதுநகர் பிப், 2
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா விருதுநகரை உருவாக்குவது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடப்பில் உள்ள அரசு விதி முறைகளுக்கு முரணாக, சிறப்பு ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது உள்குத்தகை நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
சிவகாசி வட்டத்திற்குட் பட்ட 3 பட்டாசு ஆலைகள், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 8 பட்டாசு ஆலைகள், சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட ராஜேசுவரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை, ஸ்ரீவில்லி புத்தூர் வட்டத்திற்குட்பட்ட 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 14 பட்டாசு தொழிற்சாலைகளின் படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறிய ப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்கண்ட பட்டாசு தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.