தர்மபுரி ஆகஸ்ட், 7
தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 13-ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற சனிக்கிழமை நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை முதல் வருகிற 12-ம்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றங்களில் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து வருகிற 13-ம்தேதி காலை 10 மணிக்கு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஆஜராகி நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in