Spread the love

ஈரோடு நவ, 17

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

இன்று நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,800 கன அடி தண்ணீர் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *