திருவள்ளூர் அக், 31
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பிரதமரின் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கீழ் 5 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஏதுவாக அரசு மானிய தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுவதற்கான ஆணையையும், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.