கன்னியாகுமரி ஆகஸ்ட், 4
நாகர்கோவில் குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரூ.39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் துணிகள் அடங்கிய பார்சல் கிடைக்கவில்லை.
எனவே வக்கீல் மூலம் சுரேஷ்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமார் குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கை தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கூரியர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு துணிகளின் மொத்த மதிப்பான ரூ.39,998 மற்றும் அபராதம் ரூ.15 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.57,998-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.