Spread the love

நெல்லை அக், 3

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை யொட்டி அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். பூஜைக்கு படைக்கும் அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனையும் அப்போது அதிகரித்து காணப்படும். நாளை சரஸ்வதி பூஜைகடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பூஜை பொருட்களை வாங்க இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடைகளில் திரண்டனர். இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளை மார்க்கெட்டுகளில் பொது மக்கள் கூட்டம் களை கட்டி காணப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பொது மக்கள் திரண்டனர். சரஸ்வதி பூஜையை யொட்டி இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,300-க்கும், பிச்சிப்பூ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.130, சம்மங்கி ரூ.300, அரளிப்பூ ரூ.400, ஆப்பிள் ரோஸ் ஒரு கட்டு ரூ.320, பன்னீர் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதே போல் காய்கறி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூஜை பொருட்களான அவல், பொரி, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

சரஸ்வதி பூஜையை யொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் நெல்லை சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *