நெல்லை செப், 29
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உத்திராண்டு ராமன்.
இவர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த முறையில் ஏராளமான மீன்களை மீனவர்கள் பிடித்திருந்தனர். இதையடுத்து உத்திராண்டு ராமன் அந்த மீன்களை பறிமுதல் செய்தார். அப்போது அங்கு வந்த திமுக. பிரமுகரும், உவரி கூட்டுறவு மீனவர் சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் என்பவர் மீன்வளத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
உடனே அதிகாரிகள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். ஆய்வாளர் பிரேமா தலைமறைவான அந்தோணி ராயை தேடி வருகிறார். இதற்கிடையே அந்தோணி ராய், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.