தர்மபுரி செப், 15
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.
மேலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலை நீர்வரத்து குறைந்தும், மாலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தும் காணப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.