நெல்லை செப், 14
நெல்லையில் கடந்த 8 ம்தேதி நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நில எடுப்பு பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை – கன்னியாகுமரி சாலை ஜோதிபுரம் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை வந்த முதலமைச்சர், மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணியை அறிவித்தார். முதலமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்துள்ளோம்.
நெல்லை தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் தாழையூத்தில் தொடங்கி பொன்னாக்குடி வரை சென்று முடியும் வகையில் மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதில் சங்கரன்கோவில், தென்காசி, பொட்டல்புதூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த மேற்கு புறவழிச் சாலை திட்டத்திற்காக ரூ. 370 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நில எடுப்பு பணி முடிவடைந்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். திட்டப் பணிகள் முழுமையாக 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே பச்சை ஆற்றின் மேல் ஒரு பாலம் மற்றும் 2 ரெயில்வே மேம்பாலங்கள் அமைகிறது என அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம், தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.