Spread the love

ஈரோடு செப், 14

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக நாளை காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 26 தொடக்கப்பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு காலை உணவு சமைக்க, ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கிருந்து காலை உணவு 26 பள்ளிக்கூடங்களுக்கும் தினசரி அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிமாறப்படும்.

இந்த மையத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அதிகாரி ஜோதிசந்திரா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *