விழுப்புரம் செப், 12
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் இளங்காடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் தனிநபர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பண்ணை குட்டையின் பயன்கள் குறித்து கேட்டறிந்ததோடு அந்த பண்ணை குட்டையை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கும்படி அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அதே பகுதியில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அதன் பின்னர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அமிர்தகுளத்தை பார்வையிட்டு சரியான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.