புதுடெல்லி ஏப்ரல், 14
தமிழ் புத்தாண்டு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை ஆசீர்வாதமாக கருதுவதாக மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார். இன்றைய தினத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை மிகப்பெரும் ஆசீர்வாதமாக நினைப்பதாகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர் விடுத்த அறிக்கையில், சிறு, குறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் உதவி 20 லட்சம் ஆக உயர்த்தப்படும். கிராமங்களில் பைப்லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், மக்கள் மருந்தகத்தில் 80 சதவீத தள்ளுபடியில் விலையில் மருந்துகள் வழங்கப்படும். பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.