விருதுநகர் ஏப்ரல், 11
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி உறுதி என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த தேர்தலில் நிச்சயமாக பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.
அதன் பிறகு தேர்தல் நடக்காது, சர்வாதிகாரம் மட்டும்தான் தலை விரித்தாடும். நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாகூர், எத்தனையோ முறை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து அதானி விஷயத்தைப் பேசியதை தொடர்ந்து, அவரின் பதவியை நீக்கி வழக்குப் போட்டு நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் செய்தார்கள். அதன் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று தான் அவரால் மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு வர முடிந்தது.
இங்கே ஒரு ஆளுநர் இருக்கிறார் எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசுவார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கனர், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 75 உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார். நாம் ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டது. இவர் (ஆளுநர்) யார் நம் மாநிலத்திற்குத் தமிழகம் என வைக்க கூறுவதற்கு, இவர் அதிகாரியாக இருந்தவராம்.
இன்னொரு அதிகாரி வேறு உள்ளார் அண்ணாமலை. என் மண் என் மக்கள் என்று சொல்கிறார், ஆனால் கர்நாடகாவில் இருந்தபோது நான் தமிழன் இல்லை நான் கன்னடகாரன் என சொன்னவர் கோவை நிற்கிறார், கர்நாடகாவில் எங்காவது நின்று இருக்க வேண்டியது தானே. நம் போராடிப் பெற்ற தமிழ்நாடு என்ற பெயரையே தமிழகம் என்று சொல்கிறார். தமிழகம் சொல்ல வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார், எங்களுக்குச் சொல்லித் தர உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை நாம ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும், நம்மைப் போலக் காங்கிரஸ் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும். கைவிரலைப் பிரித்தால் உதயசூரியன், சேர்த்தால் காங்கிரஸ் சின்னம்.
இந்தப் பகுதியில் உள்ள அனைகுட்டம் அணையில் மதகுகள் பழுதுபார்க்க 29 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் 414 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டு குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசின் சார்பில் வியாபாரிகள் நலனுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சேஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா நதியின் குறுக்கே 5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, மேலும் அர்ஜுனா நதியின் நீர்வழி பாதையில் உள்ள முத்துலிங்கபுரம் 10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.