செங்கல்பட்டு நவ, 14
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எட்டாவது தேசிய ஆயுர்வேத தினம் தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் கீதா ராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மைதிலி வரவேற்றார். ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை பற்றியும் நோய் வராமல் காத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டியவைகள் உண்ண வேண்டிய உணவுகள், ஆயுர்வேதத்தில் பஞ்சகர்மா சிகிச்சைகள் போன்றவற்றை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார். விழாவில் மூலிகை மருந்து, பொருட்கள் நவதானியங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர் ஆயுர்வேத மருந்தாளுனர் இன்ப மணி நன்றி கூறினார்.