நெல்லை ஆகஸ்ட், 18
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு எதிராக காவலர்களின் பணிகள் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்று தந்தது. இந்நிலையில் சுமார் 6 மாத காலமாக புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இதனால் கொள்ளை சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், பொதுமக்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.