நெல்லை ஆகஸ்ட், 17
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
இதில் மாநகராட்சி உறுப்பினர் நித்திய பாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மேயர், துணைமேயரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புதிய பேருந்துநிலைய பகுதியில் சுமார் 132 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை.இதனால் வெளியூர்களுக்கு செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள். எனவே அவர்கள் நலன் கருதி 5 ஆட்டோக்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சுழற்சி முறையில் 5 ஆட்டோக்களாக தினமும் சென்று வருவோம்.
இதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறும்போது, புதிய பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேவையில்லாத கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், விபத்து அபாயத்தை தடுக்கவும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.