நெல்லை ஆகஸ்ட், 15
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் மூவர்ண பலூன்களை ஆட்சியர் விஷ்ணு பறக்கவிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த 253 பேருக்கும், சமூக தொண்டாற்றியவர்களுக்கும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. கரகம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் சுமார் 1,315 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் ஆணையர் அவினாஷ்குமார், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, துணை மாவட்ட ஆட்சியர் ரிஷப், சந்திரசேகர், துணை ஆணையர்கள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார், திட்ட அலுவலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.