விழுப்புரம் ஜன, 4
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த ஆட்சிப்போல பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், தைத்திருநாளில் பொங்கல் தொகுப்புடன் கூடுதல் நிதி வழங்க வேண்டும், என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், நாராயணன், வேலு, செல்வக்குமார், வெங்கடேசன், சண்முகம், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.