வேலூர் டிச, 15
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 48 பள்ளிகளில் படிக்கும் 3,250 மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை வித விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவை தயாரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நவீன வசதிகளுடன் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் வாகனங்கள் மூலம் 48 பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை புதுடெல்லியில் உள்ள மத்திய தலைமை செயலக உதவிப்பிரிவு அதிகாரிகள் 8 பேர் அடங்கிய குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து அந்த உணவை சாப்பிட்டனர். மேலும் மாணவர்களிடம் உணவின் ருசி, தரம் மற்றும் காலை உணவின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தனர். இந்த குழுவினர் தங்களின் பயிற்சிக்காக ஓரிருநாட்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன், வேலூர் மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர் லூர்துசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.