நெல்லை ஆகஸ்ட், 9
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முருகன், அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தமிழக முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனை தனியார் நிர்வாகம் ஒன்று ஒப்பந்த முறையில் எடுத்து நிர்வகித்து வருகிறது.
நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 80 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை நேரம், ஊதியம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், வாகன கொள்முதல் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.