Spread the love

நீலகிரி டிச, 5
கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கேரட் விவசாயம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக பயிரிட்டு வருகின்றனர். கேரட்டுக்கு கொள்முதல் விலை கிடைத்து வந்ததால்,

ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிட்டு இருந்தனர். கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்ததால், விவசாயிகள் பயிர்களுக்கு ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

மேலும் மழை காரணமாக காய்கறி பயிரிட்டுள்ள தோட்டங்களில், பயிர்கள் செழித்து வளர்ந்தன. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கினால் அறுவடைக்கு தயாராகி உள்ள கேரட் பயிர்கள் அழுகி விடும் என்பதால், தோட்டங்களின் நடுவே தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வழிந்தோடும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கேரட் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

மேலும் கேரட்டுகளில் வெடிப்புகள் ஏற்படும் என்பதால், விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல தொடங்கினர். வரத்து அதிகரித்த காரணத்தால் மண்டிகளில் கொள்முதல் விலை குறைந்து உள்ளது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்தும், சில விவசாயிகள், கேரட்டுகளை அறுவடை செய்யாமல் கொள்முதல் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து நெடுகுளாவை சேர்ந்த விவசாயி கூறும்போது:

கடந்த மாதம் தோட்டங்களில் கேரட் பயிரிட்டோம். தற்போது கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், வரத்து அதிகரித்த காரணத்தால், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30க்கு தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே, கொள்முதல் விலை உயரும் என்ற நம்பிக்கையில் அறுவடையை தாமதம் செய்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *