Spread the love

கோத்தகிரி ஆகஸ்ட், 8

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் கோத்தகிரி ஜக்கலோடை, நாரகிரி கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 3-வது கிராமமாக மிளிதேனில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பில்லன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதை தடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *