தர்மபுரி நவ, 15
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இதில் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில்,
பொம்மனூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுற்று வட்டார பகுதியில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை நம்பி உள்ள நாங்கள் விவசாய விளை பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். இதற்காக எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள மல்லுப்பட்டிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தர்மபுரி-ஓசூர் இடையே 4 வழி சாலை விரிவாக்க பணி நடக்கிறது. பாலக்கோடு பொம்மனூர் ஏரி அருகே இதற்காக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. எங்கள் சுற்று வட்டார கிராம மக்களின் வசதிக்காக அந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகளை அமைத்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பார்த்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.