நெல்லை அக், 28
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவர் காய்கறி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி, இவரும் டவுனில் முறுக்கு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும், ஐயம் பெருமாள் என்ற மகனும் உள்ளனர்.இதில் புவனேஸ்வரி மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 382 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
எம்பிபிஎஸ் படிப்பதற்காக தமிழக அரசு நடத்திய கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவில் ரேங்க் பட்டியலில் 35 இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் இவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மேபல் ராணி,நீட் கோச்சிங் ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் மாணவி புவனேஸ்வரியை பாராட்டினர்.