திருவள்ளூர் அக், 27
திருவள்ளூர் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் ஆகியோர் மாசற்ற தீபாவளி கொண்டாட பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து பசுமை தீபாவளி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பகுதிகளில் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பட்டாசுகளை வெடித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 69 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.