மயிலாடுதுறை அக், 23
சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. கடல் உள்வாங்காத காரணத்தால் வெள்ள நீர்மட்டம் மேலும் உயர்ந்து பக்கிங்காம் கால்வாயில் புகும்போது, பக்கிம்காம் கால்வாய் கரை மூழ்கி பழையாறு சுனாமி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர். எனவே சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, அருள்மொழி, வட்டாட்சியர் பவளச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.