Spread the love

நெல்லை அக், 21

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18 ம்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வரம்பு மீறி சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பாக அப்போதைய காவல் துறை தலைவர் சைலேஷ்குமார் யாதவ், காவல் துறை துணைத் தலைவர் கபில் குமார் சரத்கார், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர் திருமலை உள்பட 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை ஆய்வாளராக பணியாற்றிய திருமலை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஸ் ஆகிய 3 காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மீது முதற்கட்டமாக இடைநீக்கம் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *