நெல்லை அக், 20
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அணை பகுதியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைய உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு சாகச பூங்கா மற்றும் இளைஞர்களுக்கான அறிவியல் மையமும் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் 23.6 ஏக்கர் இடத்தில் 2 பிரிவுகளாக அமைகிறது என்றார்.