நெல்லை ஆகஸ்ட், 4
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 1 ம் தேதி முதல் நெல்லை, தென்காசி உள்பட சில மாவட்டங்களில் கன மழைக்கான ரெட் அலார்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து இருந்தது. அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்து தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை அருவியை பார்வையிட மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.