நெல்லை ஆகஸ்ட், 4
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.
மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுபோல குளத்தின் மறுகாலில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது குளத்தின் நீர்மட்டம் அதிகளவில் இல்லை. மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால், விரிசல்களில் உடைப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குளம் உடைந்தால் அருகில் உள்ள காந்திநகர், செட்டிமேடு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். எனவே பழுதடைந்துள்ள குளத்தின் மறுகாலை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.