தர்மபுரி அக், 19
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால் வயல்களில் மழைநீர் தேங்கியும், தக்காளிகள் அழுகியதால் வரத்து குறைந்து மகசூல் பாதிக்கப்பட்டது. மேலும் பண்டிகைகள், சுபமுகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி நேற்று மார்க்கெட் நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 450 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனையானது. வரும் வாரங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.