விழுப்புரம் அக், 16
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மேற்பார்வையில் ஆய்வாளர் கீதா, காவல் அதிகாரி மகாராஜா, வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோர் விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 9 அட்டைப்பெட்டிகளில் 216 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் தென்னகரத்தை அடுத்த மேப்பதுரை பகுதியை சேர்ந்த செந்தில் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து செந்திலை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.