திருத்தணி அக், 14
திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது 90 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் இன்னும் 4 மாதத்திற்குள் வீடுகள் கட்டும் பணிகள் முழுமையாக முடிந்து பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஒருவர் கூறுகையில்:- மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் முருக்கம்பட்டு கிராமத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அனைத்து வசதிகளுடன் 410 சதுர அடி அளவில் 1,040 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டின் மதிப்பு ரூ.13 லட்சம். வீடுகளைப் பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஒரு லட்சத்து 50 ஆயிரம், மாநில அரசு ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. பயனாளிகளின் பங்குத்தொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி வீடுகளை பெறலாம்.
இத்திட்டத்தில் வீடுகள் தேவைப்படும் பயனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து திருவள்ளூர் நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும்.
இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து தகுதிவாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்து கொடுத்த பின்பு, வீடுகள் ஓதுக்கீடு செய்து தரப்படும் என அவர் கூறினார்.