Spread the love

நெல்லை அக், 13

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
சுடலை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கோவிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு கிடந்தது.
இதையறிந்த ஊர்மக்கள் கோவிலில் திரண்டு சேதமடைந்த சாமி சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கோவில் தர்மகர்த்தா மலையடிபுதூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (48) திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அதே ஊரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கோவிலில் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது. அவர் தான் சாமி சிலையை சேதப்படுத்தினாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சாமி சிலை சேதம் அடைந்ததை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மலையடிப்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *