செங்கல்பட்டு அக், 13
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
மேலும் தீயில் கடையில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏதாவது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.