செங்கல்பட்டு அக், 10
போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப் பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை காவல் துறையினர் பெற்றனர்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 25 ம்தேதி அன்று 68 வழக்குகளில் சிக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் உள்பட போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ரசாயன பொருட்களை எரிக்கும் மையத்தில் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் 57 வழக்குகளில் சிக்கிய 831 கிலோ கஞ்சா, 14.83 கிலோ கெட்டமைன் என ரூ.1½ கோடி மதிப்பிலான 845.83 கிலோ போதைப் பொருட்கள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் இந்த மையத்தில் நேற்று அழிக்கப்பட்டது. அப்போது சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யாபாரதி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி உள்பட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.