திருவாரூர் அக், 5
சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய், மழையில் சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் குருசாமி, மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், முகேஷ், ஒன்றிய செயலாளர் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.