தென்காசி செப், 11
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதாவது, கடந்த 6 ம்தேதி முதல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் வெள்ளப்பெருக்கு நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் தொடர்ந்து 5வது நாளாகவும்,ஐந்தருவியில் 2-வது நாளாகவும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்றும் காவல்துறையினர் தடை விதித்தனர்.