சேலம் செப், 9
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமையன்று கன மழை பெய்தது.
குறிப்பாக ஓமலூர், ஏற்காட்டில் மீண்டும் கன மழை கொட்டியது. ஓமலூரில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கன மழையாக கொட்டியது. இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.
இதே போல ஏற்காட்டிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மலையில் புதிது புதிதாக அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் புதிய அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். சேலம் மாநகரில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது . மழையினால் பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம், அரிசி பாளையம், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற மேயர் ராமச்சந்திரன் பொதுமக்களை சமாதானப்படுத்தியதுடன் ஓடையையும் தூர்வார உத்தரவிட்டார்.
அகிலாண்டஸே்வரி ஓடை பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 20குடும்பங்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.