ஏப்ரல், 12
இன்றைய சூழலில் ‘லோ ஐ சைட்’ என்று சொல்லக்கூடிய பார்வை குறைபாடு என்பது குழந்தைகளிடையே பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது.
மோசமான வாழ்வியல் பழக்க வழக்கம், முறையற்ற வகையில் படிப்பது, மிக அதிகமாக டிவி பார்ப்பது அல்லது மொபைல் போன்களுக்கு அடிமையாக இருப்பது போன்றவையே பார்வை குறைபாடு பிரச்சினைகளுக்கு பொதுவான காரணங்களாக அறியப்படுகின்றன. எனினும், சில குழந்தைகள் பிறக்கும்போதே பார்வை குறைபாடு பிரச்சினைகளுடன் பிறக்கின்றனர்.
பார்வை குறைபாடு உடைய குழந்தைகளிடம் சில வகை அறிகுறிகள் தென்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்கு அறிந்த முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம், படிப்பதில் சிரமங்கள், மங்கலான பார்வை, கலர் மற்றும் காண்ட்ராஸ்ட் பிரித்து அறிய முடியாத சூழல், தலைவலி அல்லது கண்கள் சிவப்பது ஆகியவையே பார்வைக் குறைபாடு பிரச்சினைக்கான அறிகுறிகளாக உள்ளன. இதுபோன்ற அறிகுறிகள் தென்படும் சமயத்தில் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் பார்வை இழப்பு பிரச்சனை ஏற்படக்கூடும்.
நரம்பியல் பிரச்சனைகள் காரணமாக இளைஞர்களிடையே கண்கள் பலவீனம் அடையலாம். குறிப்பாக, மூளையில் இருந்து கண் பார்வைக்கு செயல்படும் நரம்புகளில் காயம் ஏற்பட்டால் பார்வை குறைபாடு ஏற்படக்கூடும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பார்வை குறைபாடு பாதிப்பு இருந்தால், அந்த பரம்பரை குறைபாடுகள் காரணமாக குழந்தைகளுக்கு பலவீனமான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு ஆகியவை ஏற்படலாம்.
குளுக்கோமா, கேட்ராக்ட், ரெடினல் இல்னெஸ், ரெடினாப்ளாஸ்டோமா போன்ற பிரச்சினைகள் காரணமாக குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படலாம். இந்த குறைபாடுகளுக்கு வெகுவிரைவில் சிகிச்சை அளிக்காவிட்டால் குணப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்புகள் நிரந்தரமாகலாம்.
வாழ்க்கையில் குழந்தைகள் கடைபிடிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள் காரணமாகவும் பார்வை குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக, மோசமான உணவு பழக்க வழக்கங்கள், மணிக்கணக்கில் டிவி பார்ப்பது, செல்போன்களுக்கு அடிமையாக இருப்பது, முறையாக உட்காராமல் படிப்பது போன்ற காரணங்களாலும் பார்வை குறைபாடு ஏற்படலாம்.
பார்வை குறைபாடுக்காண எந்த ஒரு அறிகுறி தென்பட்டாலும், உங்கள் குழந்தைகளை உடனடியாக கண் மருத்துவரிடம் காண்பியுங்கள்.
குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழ்வியல் மாற்றங்களையும், உணவுப்பழக்க மாற்றங்களையும் மேற்கொள்ளுங்கள்.
விட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை கொடுங்கள். கீரைகள், முட்டை, பால், கேரட், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற காய்கறிகள், உருளைக்கிழங்கு, பப்பாளி பழம், தயிர், சோயா பீன்ஸ் போன்ற உணவுகளில் மிக உயர்வான ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பருப்புகள், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை கொடுங்கள்.
ஒமேகா 3 சத்து கொண்ட உணவுகளை கொடுக்கலாம்.
படிக்கும் மற்றும் எழுதும் பழக்க வழக்கங்களை முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, படுத்துக்கொண்டே படிக்கக் கூடாது. படிக்கும்போது அறைகளில் வெளிச்சம் நிரம்பி இருப்பதை உறுதி செய்யுங்கள். மிக அருகில் வைத்து செல்போன்கள் அல்லது டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.