மே, 15
பெற்றோர் குழந்தைகள் நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பற்றி அவர்களுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
சிறுவர், சிறுமியர்கள் சிலர் நகம் கடிப்பார்கள். நகத்தை கடிக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் கடுமை காட்டக் கூடாது. ‘ஏன் எப்போதும் நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று மிரட்டினால் அந்த பழக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். பொதுவாக பதற்றமான மனநிலையில், கவலையில் இருக்கும் குழந்தைகள் நகம் கடித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் பள்ளியில் பாடம் கடினமாக இருந்தாலோ, சக மாணவர்களை பார்த்தோ நகம் கடிக்கும் பழக்கத்தை கற்றிருக்கக்கூடும். நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
அவ்வப்போது பெற்றோர் நகங்களை வெட்டி விட வேண்டும். பெற்றோர், பிள்ளைகள் முன்பாக நகத்தைக் கடித்து துப்பும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். நக இடுக்குகளில் அழுக்கு சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கி கூற வேண்டும். அவர்களாகவே நகங்களை வெட்டுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். சிறுவயதில் கை சப்பும் குழந்தைகள் நாளடைவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் ஈடுபடுவார்கள்.
சுத்தமான வேப்ப எண்ணெய் இதற்கு தீர்வாக அமைந்திருக்கிறது. குழந்தை தூங்கும்போது சப்பும் விரலில் சிறிதளவு வேப்ப எண்ணெய்யை தடவி வரலாம். ஒருசில தடவை அவ்வாறு செய்து வந்தால் கசப்புத் தன்மை காரணமாக குழந்தைகள் விரலை வாயில் வைக்காது. நாளடைவில் இந்த பழக்கம் மறைந்து போய்விடும்.