மே, 17
மூத்த தலைமுறையில் குறைந்தது 5 குழந்தைகளுக்கு மேல் இருந்தது.இரண்டாம் தலைமுறையில் மூன்று அல்லது இரண்டாக குறைந்தது. மூன்றாம் தலைமுறையில் இரண்டு என்பது தீர்மானிக்கப்பட்டதை போல் உள்ளது.
ஒன்று அல்லது இரு குழந்தை என்பதால் பெற்றோர்கள் மீதான குழந்தை வளர்ப்பு முறையும் கண்டிப்பும் அக்கறையும் அறவே இல்லாமல் போய்விட்டது.அதற்கு பதிலாக குழந்தைகளின் வளர்ப்பினை அந்த குழந்தைகள் வசமே பெற்றோர்கள் ஒப்படைத்து விட்டனர்.
எந்த ஆடை அணிவது? எதை உண்பது? தலைமுடி எப்படி வெட்டுவது? உள்ளிட்ட ஒவ்வொரு விசயத்தையும் குழந்தை பருவத்தில் இருந்தே அடம் பிடித்தல் மூலமாக பிள்ளைகள் தங்களின் பிடிவாதத்தை இறுக்கி பிடித்து விடுகின்றனர்.
இவற்றில் எதையுமே பெரும்பாலான பெற்றோர்கள் குறுக்கீடு செய்வதில்லை.15 வயதை எட்டும் போதுதான் நமது பிள்ளையை சரியாக வளர்க்காமல் விட்டுட்டோமோ? என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர்.
நூற்றில் பத்து குழந்தைகள் மட்டுமே அதிசமாய் முதல் தலைமுறை பிள்ளைகளை போன்று ஒழுக்கமாகவும்,அறிவாளிகளாகவும்,பெற்றோர்களின் சொல் கேட்டு நடக்கும் பொறுப்புள்ள பிள்ளைகளாகவும் வளர்கின்றனர்.
எதிர்கால சிந்தனைகளோ? திட்டமிடல்களோ? எதுவுமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிள்ளைகள் வாழ்கின்றனர்.இதனால் நிறைய பெற்றோர்கள் சிறுவயதிலேயே தங்களின் பிள்ளைகளை இழந்து விடுகின்றனர்.
குடி,கஞ்சா,ஹான்ஸ் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகவும் பைக் ரேஸ் விரும்பும் பிள்ளைகளாகவும் தங்களின் வாழ்க்கையை அற்ப ஆயுள்காலத்திலேயே முடித்துக்கொள்கின்றனர்.
பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.சமீப காலமாக சிறுவயது இளைஞர்களின் மரணம் அதிகரிப்பது கவலைக்குரியதாகும்.
இதுகுறித்து எத்தனை பெற்றோர்கள் வருத்தப்படுகின்றனர் என தெரியவில்லை? ஆனால் ஒரு புதிய தலைமுறையை தவறான வளர்ப்பில் இழந்து வருகிறோமே? என்ற கவலை மட்டுமே நம்மில் மிகைத்து நிற்கிறது.
இன்றைய குழந்தைகளான அடுத்த தலைமுறையையாவது முதல் தலைமுறையை போன்று வளர்த்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாய் மாற்றி காட்டுவோம்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்