கடலூர் ஏப்ரல், 9
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபையின் தர்மசாலையும் உள்ளது. இங்கு மாதம் தோறும் பூச நட்சத்திர நாளில் ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி 100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த பகுதியை சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்கள் சன்மார்க்க சங்கத்தினர் பாமகவினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பள்ளத்தில் இறங்கி, வள்ளலார் சர்வதேச மையம் இங்கு அமைக்க கூடாது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.