நெல்லை ஆக, 25
பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கி பேசியதாவது,
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 8ம் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
மேலும் தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கி.மீ. தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார். இந்த நடை பயணத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபட வில்லை.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.