சென்னை டிச, 22
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன். இதனைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை பறிகொடுத்தார். மேலும் 3 ஆண்டுகள் தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிடவும் முடியாது. மேலும் பொன்முடி மேல்முறையீடு செய்வதற்காக 3 ஆண்டு சிறை தண்டனை 1 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 – 2011 ம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 19 ம்தேதி தீர்ப்பளிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி; பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 அறிவிக்கப்படும்; அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
இதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
பொதுவாக வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி அமைச்சர் பதவியை பறிகொடுத்துவிட்டார். மேலும் இந்த 3 ஆண்டு தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் தேர்தலில் பொன்முடியால் போட்டியிடவும் முடியாது.
பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி, மனைவி விசாலாட்சி மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களுக்கு பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைய வேண்டும் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஏற்கனவே தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்த போதும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். தற்போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்ததுடன் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. இதனால் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.