சென்னை ஆகஸ்ட், 13
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து சோனியா காந்தி தனிமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் குணம் அடைய அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. அவர் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். விரைவில் மீண்டும் வழக்கம்போல் தனது பணிகளில் ஈடுபடுவார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.