திருவாரூர் ஜன, 16
திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும் கரண்டியும், பெண்களுக்கான கோலப்போட்டி போன்ற போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து, சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை மாவட்ட ஆட்சியர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்குநர் பொன்னியசெல்வன், வட்டாட்சியர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மணிகண்டன், வாசுகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.