நெல்லை ஜன, 2
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட் வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் சென்றனர்.