நெல்லை ஆகஸ்ட், 10
கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு மூல மகாலிங்கம், நெல்லையப்பர்- காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரமான பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விநாயகர், முருகன், உற்சவ சுவாமி, அம்பாள், சண்டிகேஸ் வரருக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.உற்சவருக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப் பட்டு வழிபாடுகளும், பின்னர் உச்சிகால பூஜைகளும் நடைபெற்றது.
மேலும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை தீபாராதனைகள், அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளும் ரதவீதி நடக்கிறது. இரவு பள்ளியறை பூஜை நடைபெறும்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.